முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 20 ஏப்ரல், 2009

நம்பிக்கையாளர்களின் தன்மைகள்

நம்பிக்கையாளர்களின் தன்மைகள்
-------------------------------------------------------------------------------- எவர்கள் முஸ்லிம்களாகி (வழிப்பட்டார்களோ) அவர்கள் தாம் நேர்வழியைத் தேடிக் கொண்டனர். (72:14)
மேற்கண்ட வசனத்தின்படி ஒருவர் முஸ்லிமாகி விட்டதன் காரணமாக, யூதர்களும், கிறிஸ்தவர்களும் நினைத்துக் கொண்டிருப்பது போல தான் சொர்க்கத்தைப் பெற்றுக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கை கொள்ளலாகாது. சொர்க்கத்தில் நுழைவது என்பது இறைவன் மனிதர்கள் மீது காட்டும் கருணையினால் விளைவதாகும். சொர்க்கச் சோலைகளில் வீற்றிருப்போர் பற்றி இறைமறையிலே இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு இறைவன் இவ்வாறு சொல்லிக் காட்டுகின்றான்.
எவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள். (3:107)
இங்கே ரஹ்மத் என்ற அடைமொழி கொண்டு சொர்க்கத்தைக் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் இங்கு நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும் இறைவனின் கருணையினாலன்றி, வேறெதனைக் கொண்டும் நாம் சொர்க்கச் சோலைகளில் நுழைந்து விட முடியாது. இவ்வாறு சொர்க்கச் சோலைகளில் நுழையக் கூடிய ஒருவரது தன்மைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி, இறைவன் சூரா அல் முஃமினூன் மற்றும் அல் மஆரிஜ் ஆகிய சூராக்களில் விவரித்துள்ளான். சூரா அல் மஆரிஜ் - ல்
நிச்சயமாக மனிதன் அவசரக்காரனாகவே படைக்கப்பட்டிருக்கின்றான். அவனை ஒரு கெடுதி தொட்டுவிட்டால் பதறுகிறான்;. ஆனால் அவனை ஒரு நன்மை தொடுமானால் (அது பிறருக்கும் கிடைக்காதவாறு) தடுத்துக்கொள்கிறான். (70:19-21)
இங்கே இறைவன் மனிதனைப் பற்றிய பொதுவான தன்மைகளைப் பற்றி விவரிக்கின்றான். மனிதர்களில் அநேகம் பேர் பொறுமையிழந்த அவசரக்காரர்களாகவே இருக்கின்றார்கள். அவர்களை ஒரு துன்பம் தொட்டு விடும் என்றால் அவர்கள் பதறுகின்றார்கள். அதேநேரத்தில் அவர்களை ஒரு நன்மை அடைந்து விடுமென்றால், அந்த துன்பத்திற்குப் பதிலாக இன்பத்தை மாற்றிக் கொடுத்து விட்டோமென்றால், அதன் காரணமாக இறைவனுக்கும் மற்றும் மனிதர்களுக்கு செலுத்த வேண்டிய உரிமைகளைச் செலுத்த மறுத்து விடுகின்றார்கள்.
இதில் விதிவிலக்காணவர்களும் உண்டு. மேலே சுட்டிக் காட்டப்பட்டவர்கள் தவிர இன்னும் சிலர் இருக்கின்றார்கள், இவர்கள் முந்தையவர்களைப் போல நடக்க மாட்டார்கள், அவர்களது பண்புகள் தனித் தன்மை கொண்டவையாக இருக்கும் என்பதைக் கீழ்வரும் குர்ஆன் வசனம் மூலம் இறைவன் மனிதர்களுக்கு விவரிக்கின்றான் :
தொழுகையாளிகளைத் தவிர- (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார்களே அவர்கள். அவர்களது பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்கு உண்டு. யாசிப்போருக்கும் விறியோருக்கும் (அவர்களின் பொருட்களில் பங்குண்டு). (அல் மஆரிஜ் : 22-25)
இங்கே இறைவன் அந்த நல்லடியார்கள் பற்றிக் கூறும் பொழுது, அந்த நல்லடியார்கள் தங்களைச் சுற்றியுள்ள தேவையுடையவர்களின் தேவைகளைப் பற்றிய கவனம் கொண்டவர்களாக இருப்பார்கள், பிறரது உரிமைகளைப் பேணக் கூடியவர்களாகவும், தங்களது பொருட்களில் இருந்து அவர்களுக்குச் செலவழிப்பவர்களாகவும், இன்னும் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள செல்வங்களில், ஏழைகளின் உரிமைகள் கலந்திருக்கின்ற என்பது பற்றியும் மிகவும் கவமுடையவர்களாகச் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இன்னும் செலவழிப்பதைக் கூட அவர்கள் வீண் விரையமாகச் செலவு செய்ய மாட்டார்கள். கணக்குப் பார்த்து இறைவனது வரம்புகளைப் பேணி செலவுகளைச் செய்து கொள்வார்கள். இறைவன் விதித்துள்ள ஜகாத் எனும் கடமையை அவர்கள், தங்களிடமுள்ள செல்வங்களில் இருந்து இரண்டரை சதவீதத்தைப் பிரித்தெடுத்து முறையாகச் செலவு செய்யக் கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
ஜகாத்தைப் பற்றியும் அதன் பொருள் பற்றியும் இறைத்தூதர் வழி வந்த அபுபக்கர் (ரலி) அவர்கள் உணர்ந்திருந்த காரணத்தினால் தான், ஜகாத்தை முறையாக வழங்காதவர்கள் மீது போர் தொடுக்கவும் அவர்கள் முடிவெடுத்தார்கள். தொழுகையை நிலைநிறுத்துவது எவ்வாறு ஒரு முஸ்லிமின் மீது கடமையோ அவ்வாறே ஜகாத்தையும் நிறைவேற்றுவது கடமை என்று அவர்கள் வாதிட்டார்கள். எனவே தான் இறைவன் தொழுகையையும், ஜகாத்தையும் இணைத்தே திருமறையிலே பல இடங்களில் குறிப்பிட்டுக் கூறியிருக்கின்றான். ஜகாத்தைத் தவிர்த்து இன்னும் தான தர்மங்களையும் வழங்குமாறு இறைவன் முஸ்லிம்களுக்கு அறிவுறுத்தியும் இருக்கின்றான்.
தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; (73:20)
இறைநம்பிக்கையாளர்களின் அடுத்த பண்புநலன்கள் எவ்வாறு இருக்குமெனில், அவர்கள் மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். இதனை அவர்கள் உதட்டின் நுனியில் வைத்து வாய் வார்த்தையாக நம்பாமல், நாம் செய்யக் கூடிய ஒவ்வொரு செயல்களுக்கும் தகுந்த கூலி வழங்கப்படக் கூடிய நாளொன்று இருக்கின்றது, அந்த நாள் தான் இறுதித்தீர்ப்பு நாளாகிய மறுமை நாள் என்பதாகும் என்பதை அவர்கள் உறுதியாக நம்பி, வாய்மையாக ஒப்புக் கொள்ளக் கூடியவர்களாக இருப்பார்கள். யாருடைய வலக் கரத்தில் நன்மையின் ஏடுகள் வழங்கப்பட இருக்கின்றனவோ, அவர்களது வெற்றியின் ரகசியம் கீழ்க்கண்ட வசனத்தில் அடங்கியுள்ளது,
''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.'' (69:20)
அன்றியும் நியாயத் தீர்ப்பு நாள் உண்டென்பதை (மெய்ப்படுத்தி) உறுதிகொள்பவர்கள். இன்னும் தம்முடைய இறைவன் (வழங்கக் கூடிய) வேதனைக்கு அஞ்சுpயவாறு இருப்பார்களே அவர்கள். நிச்சயமாக அவர்களுடைய இறைவன் (வழங்கக்கூடிய) வேதனை அச்சப்படாது இருக்கக் கூடியதல்ல. (70:26-28)
இன்னும் அவர்கள் மறுமையில் இறைவன் தரவிருக்கக் கூடிய தண்டனைகள் பற்றிப் பயந்தவர்களாக இருப்பார்கள். மறுமையின் தண்டனையைப் பற்றிய வசனத்தைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் வினவினார்கள், இறைத்தூதுர் (ஸல்) அவர்களே! நீங்களுமா அந்த மறுமையின் தண்டனையைப் பற்றிப் பயப்படுகின்றீர்கள்! அதற்கு, ஆம்! நானும் தான் அந்த மறுமையின் தண்டனைகள் குறித்து பயப்படுகின்றேன், இறைவனின் அந்தத் தண்டனைப் பயத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்று எவரும் கிடையாது என்று விடைபகர்ந்தார்கள்.
எனவே, இஸ்லாத்தின் பால் வழுவாது வாழ்ந்து கொண்டிருக்கின்றவர்கள் கூட நாம் அந்த மறுமை தண்டனையிலிருந்து பாதுகாப்புப் பெற்று விட்டோம் என்று இறுமாப்பு கொள்ளலாகாது. எத்தனை நல்லமல்கள் தான் அவர் செய்திருந்தாலும், இன்னும் அவர் மிகச் சிறப்பான நல்லமல்களைச் செய்வதற்கு முயற்சிப்பதோடு, இன்னும் மேலதிகமாக இறைவனின் தண்டனை பற்றிய அச்சத்தை அதிகம் சுமந்து கொண்டிருப்பவராகவும் அவர் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :
அன்றியும், தங்கள் மறைவிடங்களை (கற்பை) பேணிக் கொள்கிறார்களே அவர்கள்- தம் மனைவியரிடத்திலும், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடத்திலும் (உறு கொள்வதைத்) தவிர, நிச்சயமாக அவர்கள் (இத்தகையோருடன் உறவு கொள்வது பற்றி) நியதிக்கப்பட மாட்டார்கள். எனவே எவரேனும் இதற்கப்பால் (உறவு கொள்வதைத்) தேடினால் அவர்கள் (இறைவன் விதித்த) வரம்பை மீறியவர்கள். (70:29-31)
இறைவன் அனுமதித்திருக்கின்ற பாலியல் உறவு பற்றிய வரையறைகளைத் தவிர்த்து, மாற்று வழியை எவனொருவன் கண்டு கொள்கின்றானோ அவனது அந்தச் செயல்பாடுகள் இறைவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
இன்னும் முஸ்லிம்களின் பண்புநலன்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இறைவன்,
இன்னும் எவர்கள் தம் அமானிதங்களையும் தம் வாக்குறுதிகளையும் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள். (70:32)
வாக்குறுதிகள் என்பது, கடன் போன்றது, எது விஷயத்தில் அவர்கள் வாக்குறுதிகளை வழங்கினார்களோ அதனை திருப்பிச் செலுத்தியே தீர வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இன்னும், எவர்கள் தங்கள் சாட்சியங்களில் உறுதியுடன் இருக்கிறார்களோ அவர்கள்.(70:33)
இன்னும் அவர்கள் இஸ்லாத்தில் நுழைவதற்கு எதனைச் சத்தியமாகச் செய்து கொண்டானோ அதனை நிறைவேற்றுவதிலும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்.
இன்னும் அவர்கள் தொழுகையை முறையாகப் பேணி வருவார்கள், அதுவன்றி இறைவன் கட்டாயக் கடமையாக்கிய பர்ளுகளையும், இன்னும் ஆர்வமூட்டப்பட்ட சுன்னத்துக்களையும் அவர்கள் பேணி வருவார்கள் என்றும், இறைநம்பிக்கையாளர்களின் பண்புநலன்களைப் பற்றி அவன் தன்னுடைய திருமறையிலே விவரிக்கின்றான்.
இறைநம்பிக்கையாளர்களின் பண்புநலன்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்த இறைவன், தொழுகையில் ஆரம்பித்து, அவர்களது பண்புகளை தொழுகையிலேயே முடித்திருக்கின்றான் என்பதை நாம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். ஏனெனில் தொழுகை என்பது இறைவனின் பார்வையில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். எனவே தான் மறுமை நாளிலே ஒவ்வொருவரிடமும் வினவப்படவிருக்கின்ற முதல் கேள்வியாக இந்தத் தொழுகை அமைந்துள்ளது. அவன் தன்னுடைய தொழுகையில் சரியானவனாகக் கணிக்கப்பட்டு விட்டானென்றால் அவன் வெற்றி பெற்றவனாவான். தொழுகையில் பொடுபோக்காக இருந்தவனென்றால், அவனது எந்த நற்செயல்களும் இறைவன் புறத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
(ஆக) இத்தகையோர் தாம் சுவர்க்கங்களில் கண்ணியப் படுத்தப்பட்டவர்களாக இருப்பார்கள். 70:35
எனவே, மேலே இறைவன் சுட்டிக் காட்டிய தன்மைகளை எவர் கொண்டிருக்கின்றாரோ, அத்தகையவர்களுக்கு இறைவன் தன்னுடைய அருட்கொடையாக சுவனச் சோலைகளைப் பரிசாகத் தருவதாக வாக்களித்துள்ளான். இன்னும் சுவனச் சோலைகளை ஆசை வைக்கக் கூடிய அனைவரும், இறைவன் மேலே சுட்டிக் காட்டியவை தவிர இன்னும் ஏராளமான இஸ்லாமிய நடைமுறைகளைப் பேணி வாழ வேண்டியவராகவும் இருக்கின்றார். இறைவன் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியவற்றை முறையாக ஒருவர் பேணி நடக்க ஆரம்பித்து விடுவாரென்றால், ஏனையவைகளைப் பின்பற்றுவதென்பது அவருக்கு மிக எளிதானதொன்றாக ஆகி விடும். ஆக, ஒட்டுமொத்தமாக இறைவனது கட்டளைகளைப் பின்பற்றி நடக்க ஒருவர் ஆரம்பித்து விடுவாராகில், அவர் இறைவனின் கருணையினால் சொர்க்கச் சோலைகளை அனந்தரங் கொள்ளக் கூடியவராக அவர் தகுதி பெற்றுவிடுவார். இறைவன் அவனது வரையறைகளைப் பேணி நடக்கக் கூடிய சமுதாயமாக நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்!!
இறைவன் மனிதர்களுக்கு வழங்கக் கூடிய அருட்கொடைகளிலேயே மிகச் சிறப்பான அருட்கொடை எதுவென்றால், மனிதர்களை வழிகெடுக்கக் கூடிய அனைத்து வழிகேடுகளிலிருந்தும் அவனைக் காத்து, இரட்சித்து, தன்னுடைய நேர்வழி என்ற அருள் ஒளியின் பால் நுழையச் செய்வதேயாகும். அவன் நேர்வழி வழங்கியபின் அந்த நேர்வழியைப் பின்பற்றி அதனை வழுவாது பின்பற்றி வாழ்பவனைக் குறித்து இறைவன் மிகவும் திருப்தியுற்று, மகிழ்ச்சியும் அடைகின்றான். இதனை இறைவன் தன்னுடைய திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் :
உங்களை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியின் பால் கொண்டுவருவதற்காக உங்கள் மீது அருள்புரிகிறவன் அவனே; இன்னும் அவனுடைய மலக்குகளும் அவ்வாறே (பிரார்த்திக்கின்றனர்;) மேலும், அவன் முஃமின்களிடம் மிக்க இரக்கமுடையவனாக இருக்கின்றான். அவனை அவர்கள் சந்திக்கும் நாளில் ''ஸலாமுன்'' (உங்களுக்குச் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)'' என்பதுவே (அவர்களுக்குக் கிடைக்கும்) சோபனமாகும், மேலும் அவர்களுக்காக கண்ணியமான (நற்) கூலியையும் அவன் சித்தப்படுத்தியிருக்கின்றான். (33:43-44)
இன்னும் இத்தகைய நேர்வழி பெற்ற நல்லடியார்களுக்கு இறைவன் புறத்திலிருந்து சுபச் செய்தியாக சொர்க்கம் பற்றி நன்மாரயம் கூறப்படுகின்றது.
எனவே! முஃமின்களுக்கு - அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு நிச்சயமாக பேரருட்கொடை இருக்கிறதென நன்மாராயங் கூறுவீராக! (33:47)
இத்தகைய மிகச் சிறப்பான நற்கொடைகளைப் பெற்றுக் கொண்ட நல்லடியார்கள் பட்டியலில் இறைவன் நம் அனைவரையும் சேர்த்தருள்வானாக! ஆமீன்!!

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி