முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

திங்கள், 11 மே, 2009

இஸ்லாமும் அரசியலும்

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள் : நல்ல ஒழுக்கங்களைப் பரிபூரணமாக்குவதற்காகவே நான் அனுப்பப்பட்டேன். (முஅத்தா)
இறைவன் தனது இறைத்தூதர் மூலம் ஒழுக்கத்தின் இலக்கணங்களை வகுத்துத் தந்தான். அதன்படி அவர்களை வாழச் செய்தான்.
ஒழுக்கத்தின் சிகரமாய் வாழ்ந்த அண்ணல் நபிகளார் (ஸல்) அவர்களை நமக்கு அழகிய முன்மாதிhயாய் ஆக்கித் தந்தான் இறைவன்.
அல்லாஹ்வையும் இறுதி நாளையும் உறுதியாக நம்புகிறவர்களுக்குரிய அழகிய முன்மாதிரி நிச்சயமாக அல்லாஹ்வுடைய தூதரிடமே உங்களுக்கு இருக்கின்றது. அவர்கள் (அவரைப் பின்பற்றி) அல்லாஹ்வை அதிகமாக நினைத்துக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 33:21)
ஓர் இறைநம்பிக்கையாளன் இறையாட்சியை இவ்வுலகத்தில் நிலைநிறுத்த பாடுபட வேண்டும். அது அவன் மீதுள்ள கடமை. அதற்காக அவன் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
அவன் சிறந்த ஒழுக்கமுள்ளவனாகத் திகழ வேண்டும். ஒழுக்கமில்லாதவன் சமுதாயத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. ஒழுக்கமுள்ளவனைத் தான் மக்கள் நம்புவார்கள். அவன் சொல்வதைத்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்.
மனிதனுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள அனைத்து வணக்கங்களும் ஒழுக்கத்தை வலியுறுத்துகின்றன. தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற அனைத்தும் ஒழுக்கத்தை நோக்கியே நம்மை நகர்த்துகின்றன.
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (சொல்லிலும், செயலிலும்) உண்மையாளர்களுடன் இருங்கள். (அல்குர்ஆன் 9:119)
என்று அல்லாஹ் கூறுவதன் மூலம் ஒழுக்கம் இறைநம்பிக்கையோடு சம்பந்தப்பட்டது என்பதை நாம் உணரலாம்.
ஆக, நல்ல ஒழுக்கத்தையும், இறைவணக்கத்தையும், இறைநம்பிக்கையையும் பிரிக்க முடியாது. அவை ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.
ஒரு முறை பெருமானார் (ஸல்) அவர்களிடம், எந்த முஸ்லிமின் நம்பிக்கை முழுமையானது? எனக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், யாரிடம் சிறந்த ஒழுக்கப் பண்புகள் இருக்கின்றனவோ அவரே, என்று பதில் பகர்ந்தார்கள். (தப்ரானி)
இன்னொரு முறை பெருமானார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நியாயத் தீர்ப்பு நாளில் ஒரு முஃமினின் தராசில் சிறந்த ஒழுக்கத்தை விட கனமானது எதுவும் இருக்கப் போவதில்லை. அல்லாஹ் ஆபாசமாகவும், கடினமாகவும் பேசுகின்றவனை வெறுக்கின்றான். நல்ல ஒழுக்கத்தை உடைய ஒருவர், தொழுகை, நோன்பு ஆகியவற்றை உடையவரது நிலைக்கு வந்து விடுகின்றார். (இப்ன அஹ்மத்)
இதன் அடிப்படையிலேயே அண்ணலாரின் பண்புகளும் அமைந்திருந்தன.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் இங்கிதம் தவறி நடந்ததில்லை. யாரிடமும் கடினமாக நடந்ததில்லை. தனக்குப் பிணிவிடை செய்யும் தோழர்களிடமும் அவர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் சொற்களை உதிர்த்ததில்லை. நபிகளாரைக் கண்ட எவரும் அவர்களிடம் கரம் பற்றி ஸலாம் கொடுத்தால் அவர் தன் கரத்தை எடுக்கும் வரை நபிகளார் தங்களை கைகளை விலக்கிக் கொண்டதில்லை.
மற்றவர் தனது முகத்தைத் திருப்பிக் கொள்ளும் வரை நபிகளார் தங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டதில்லை. சம்மணமிட்டு அமர்ந்தால் அவர்களது கால்கள் மற்றவர்களின் கால்களை விட அதிகமாக நீண்டதில்லை. நபிகளார் தங்களது கரங்களால் யாரையும் அறைந்ததில்லை. தனிப்பட்ட முறையில் அவர்கள் யாரையும் வஞ்சம் தீர்த்ததில்லை. ஆனால் அல்லாஹ்வின் எதிரிகளை அவர்கள் ஒரு போதும் சும்மா விட்டதில்லை.
எப்பொழுதும் இரக்கத்துடன் இருப்பார்கள். வீட்டில் இருந்தால் வீட்டு வேலைகளில் உதவி செய்வார்கள்.
கஞ்சத்தனம் கிஞ்சிற்றும் அவர்களிடம் இருந்ததில்லை. எப்பொழுதும் தாராளத் தன்மையுடன் நடந்து கொண்டார்கள். நேர்மையானவர்கள். தைரியமானவர்கள்.
மதினாவில் அனைவரும் ஆழ் துயிலில் இருந்த இரவு நேரம்.. . எங்கம் அமைதி. திடீரென்று பேரிடி போல் ஒரு சப்தம். என்ன, ஏதென்று புரியாமல் அலறிப் புடைத்துக் கொண்டு மதீனத்து வாசிகள் தங்கள் இல்லங்களிலிருந்து வெளி வந்தார்கள். ஆனால் சப்தம் வந்த திசையிலிருந்து நபிகளார் குதிரையில் வந்து கொண்டிருந்தார்கள். மக்களே.. கவலைப்பட வேண்டாம். ஒன்றும் இல்லை என அனைவரையும் தங்கள் இல்லம் திரும்பிடச் செய்தார்கள்.
இப்படி அனைவருக்கும் முன்பாக செல்வதில் அசாத்திய தைரியம். போர்க்களத்தில் எதிரிகளோடு நெருக்கமாக நிற்பது நபிகளார் தான்.
கேட்டது எதையும் இல்லை என்று அவர்கள் சொன்னதில்லை. இருந்தால் கொடுப்பார்கள்.இல்லையெனில் மனநிறைவோடு கேட்டவர் திரும்பிடுமாறு செய்வார்கள்.
எப்பொழுதும் கண்ணியம் காத்தார்கள். அடக்கமானவர்களாகத் திகழ்ந்தார்கள். குறுகிய மனப்பான்மையைக் குழி தோண்டிப் புதைத்து விட்டு, பரந்த மனப்பான்மையோடு அனைவரிடமும் பழகினார்கள்.
தர்க்கம் செய்வது அவர்களது சுபாவத்தில் இல்லை. அருவருப்பான வார்த்தைகளை அவர்கள் உபயோகித்ததில்லை.
அவர்கள் அளவுக்கு மீறி ஒருவரைக் கண்டித்ததும் கிடையாது. அளவுக்கு அதிகமாக ஒருவரைப் புகழ்ந்ததும் கிடையாது. எப்பொழுதும் யாரைப் பார்த்தாலும் எம் பெருமானார் சிரிப்பார்கள்.
குழந்தைகளோடு மிருதுவாகப் பேசுவார்கள். அவர்களை மடியில் வைத்துக் கொஞ்சுவார்கள். நோயுற்றவர்கள், ஊனமுற்றவர்களை மதீனாவின் தொலை தூரங்கள் வரை சென்று பார்த்து வருவார்கள்.
காதுகளில் ரகசியமாக யாரும் பேசினால் அவர் வாயை எடுக்கும் வரை தனது காதை எடுக்க மாட்டார்கள். யாரிடமும் முதன் முதலில் ஸலாம் எனும் முகமன் கூறுவது நபி பெருமானார் (ஸல்) அவர்களாகத் தான் இருக்கும்.
அண்ணலார் அவர்களை யார் காண வந்தாலும் தங்களது மேலாடையை விரித்து அதில் அவரை அமரச் செய்வார்கள். தோழர்களைக் கண்ணிப்படுத்தும் விதத்தில் அழகிய பெயர் சொல்லி அழைத்தார்கள்.
யாராவது அவர்களிடம் பேசினால் பேசி முடிக்கும் வரை பொறுமையாகக் கேட்பார்கள். இடைமறிக்க மாட்டார்கள். அண்ணலார் அவர்கள் வரும் போது தோழர்கள் எழுந்து நிற்பதைத் தடுத்தார்கள். யாரிடமும் அவசியமின்றி பேச மாட்டார்கள். குறுநகையே அவர்களது சிரிப்பு.
நடக்கும் போது அவர்களது காலடிகள் நிதானமாக இருக்கும். வேகமோ, நடுக்கமோ இருக்காது.
பேச்சுக்கள் நிதானமாக இருக்கும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : பெருமானார் (ஸல்) அவர்களின் பேச்சுக்கள் எவ்வளவு நிதானமாக இருந்தன என்றால் ஒருவர் அவர்கள் பயன்படுத்து; வார்த்தைகளை எண்ணிட விரும்பினால் தாராளமாக எண்ணி விடலாம்.
நறுமணத்தை விரும்பினார்கள். அதிக நேரங்களில் நறுமணத்தோடு இருந்தார்கள். ஆடம்பரத்தை வெறுத்தார்கள். எளிய வாழ்க்கையை விரும்பினார்கள்.
அண்டை வீட்டாருடன் நல்லவிதமாக நடந்து கொண்டார்கள். கோழைத்தனமில்லாமல் வாழ்ந்துகாட்டினார்கள். கோழைத்தனத்தை விட்டும் பாதுகாத்தருளும்படி பிரார்த்திக்க நமக்கும் கற்றுத் தந்தார்கள்.
இவ்வளவு நல்ல பண்புகளைக் கொண்டிருந்ததனால் தான் அவர்கள் இவ்வுலகில் வெற்றி வாகை சூடினார்கள். பூமி முழுவதும் அல்லாஹ்வின் நாமம் ஒலிக்கச் செய்தார்கள். அண்ணலாரது நபித்தோழர்கள் புடம் போட்ட தங்கங்களாக மின்னினார்கள். அல்லாஹ்வின் ஆட்சியை அகிலமெங்கும் நிலை நாட்டினார்கள்.
இந்தப் பண்புகளைக் கொண்ட கொள்கைக் கோமேதங்களாக நாம் திகழ்வோம். அல்லாஹ்வின் நாமம் இப்புவியெங்கும் ஒலித்திட ஓடாய் ஓயாமல் உழைத்திடுவோம். அண்ணலார் அழகுற அமைத்துக் காட்டிய அல்லாஹ்வின் ஆட்சியை அவனியில் அமைத்திட அனுதினமும் பாடுபடுவோம்.
Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி